திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்திலுள்ள முஸ்லீம்கள் காலப்போக்கில் நெல்லை மாவட்டம், மேலப்பாளையம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். தற்போது முஸ்லீம்கள் ஒருவர் கூட இங்கு இல்லை. ஆனால் அவர்கள் வழிபட்ட பாத்திமா பள்ளிவாசல் மட்டும் தற்ேபாது வரை இங்குள்ளது. இந்த பள்ளிவாசல் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது.
பாத்திமாவை தங்களின் கிராம தேவதையாக கருதி இந்து முறைப்படி காப்புக்கட்டி ஒருவாரம் விரதமிருந்து பூக்குழி திருவிழாவாக வருடந்தோறும் இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று மொகரம் பண்டிகை என்பதால் பள்ளிவாசல் முன்பாக குழி தோண்டி விறகுகளை போட்டு தீ வளர்த்து அதிகாலையில், விரதமிருந்த பக்தர்கள் கண்மாயில் நீராடிய பின் வரிசையாக இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழி இறங்கிய பின் சப்பர ஊர்வலம் நடைபெற்றது. தற்போது வரை முதுவன்திடல் கிராமத்தில் முதலில் அறுவடை செய்த பயிரை பாத்திமாவுக்கு படைத்த பின்னரே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.