சென்னை: மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே கள்ளக்காதலனுடன் தனியாக இருந்த இளம்பெண்ணை 6 பேர் கும்பல் மிரட்டி காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, கடந்த 6ம் தேதி இரவு 1 மணிக்கு அழைப்பு வந்த அவசர அழைப்பில் பேசிய நபர், ‘நான் கால் டாக்சி டிரைவர் பேசுகிறேன். மதுரவாயல் புறவழிச்சாலை சுங்கச்சாவடி அருகே எனது கால்டாக்சியில் சவாரிக்கு வந்த இளம்பெண் ஒருவரை 6 பேர் கும்பல் வழிமறித்து என்னை தாக்கிவிட்டு இளம்பெண்ணுடன் காரையும் கடத்தி சென்றுவிட்டது’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து அருகில் சுங்கச்சாவடி அருகே உள்ள எஸ்ஆர்எம்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு இரவு பணியில் இருந்த ரோந்து போலீசார் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபரிடம் சென்று விசாரித்துள்ளனர்.
மேலும், கடத்தப்பட்ட காரின் பதிவு எண்களை வைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரித்தனர். அப்போது, சாலையோரம் உள்ள விளையாட்டு மைதானம் அருகே இளம்பெண் கடத்தப்பட்டதாக கூறிய கார் நின்றது. அருகே சென்று பார்த்த போது, அதில் யாரும் இல்ைல. சிறிது தொலையில் இளம்பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. அந்த இடத்திற்கு போலீசார் சென்றபோது 5 பேர் கும்பல், நாலாபுறமும் சிதறி ஓடியது. அலங்கோலமாக இருந்த பெண்ணை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நிர்வாண நிலையில் நிலையில், உடலில் ரத்த காயங்களுடன், அவர் உதவி கேட்டபடி இருந்தார். கஞ்சா போதையில் இருந்த ஒருவர் போலீஸ் இருப்பதே தெரியாமல் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தார். அந்த நபரை சரியாக கவனித்து போலீஸ் வேனில் கொண்டு சென்றனர்.
பிறகு இளம்பெண்ணை மீட்டு மற்றொரு வாகனத்தில் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தகவல் அளித்த கால் டாக்சி டிரைவர் மற்றும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். அதில், பாதிக்கப்பட்ட பெண் ‘மதுரவாயல் பகுதியில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், கணவர் மதுரவாயல் புறநகர் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே 24 மணி நேரம் இயங்கும் டீக்கடை நடத்தி வருவதாக’வும் தெரிவித்துள்ளார். 2 நாளுக்கு முன்பு இளம்பெண் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சொந்த ஊரில் அம்மன் கோயிலுக்கு கூழ் வார்க்கும் திருவிழாவிற்கு கணவர், குழந்தைகளுடன் செல்ல கால்டாக்சி புக் செய்துள்ளார். அவரும், குழந்தைகளும் காரில் சென்றுள்ளனர். அவரது கணவர் பைக்கில் தனியாக சென்றார்.
திருவிழா முடிந்து மீண்டும் கால் டாக்சியில் சென்னைக்கு கடந்த 6ம் தேதி இரவு தனது குழந்தைகளுடன் இளம்பெண் வந்துள்ளார். கணவர் பைக்கில் வந்துள்ளார். மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே டீக்கடையில் சிறிது நேரம் வியாபாரம் செய்துள்ளனர். நீண்ட நேரம் ஆனதால் குழந்தைகளை கணவருடன் பைக்கில் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். சிறிது நேரம் வியாபாரம் செய்துவிட்டு, அந்த கால் டாக்சியில் தனியாக வீட்டிற்கு சென்றுள்ளார். கொஞ்ச தூரம் கார் சென்றதும் வழிமறித்த ஒருவர், கார் டிரைவரை தாக்கிவிட்டு நண்பர்கள் 5 பேருடன் தன்னை காரில் கடத்தி சென்று மைதானத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், 15 சவரன் நகைகளையும் பறித்து சென்றதாகவும் கூறி உள்ளார். இதையே புகாராகவும் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, போதை வாலிபரை கைது செய்த போலீசார், மறுநாள் போதை தெளிந்ததும் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி, இளம் பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, நகைகளுடன் தப்பிய ஐயப்பன்தாங்கலை சேர்ந்த சூர்யா(21), கருப்பையா(28), தினேஷ்(29), சுரேஷ்(19), சந்தோஷ்(22) உட்பட 6 பேரையும் நேற்று முன்தினம் பிடித்து, கடத்தல், கூட்டு சதி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். 15 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.