தெலங்கானாவின் நிஜாமாக கருதுகிறார்: சந்திரசேகர ராவ் மீது பியூஸ் தாக்கு

புதுடெல்லி: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தன்னை இன்னொரு நிஜாமாக நினைத்துக் கொள்கிறார்,’ என ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் கடந்த 7ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தை புறக்கணிப்பதாக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் வெளிப்படையாக அறிவித்தார். மேலும், மாநில அரசுகளை ஒன்றிய அரசு பாரபட்சமாக நடத்துவதால், நிதி ஆயோக் கூட்டத்தால் எந்த பயனும் இல்லை என பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதினார். சமீப காலமாகவே ஒன்றிய அரசை சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், சந்திரசேகர ராவ் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது குறித்து கருத்து தெரிவித்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், ‘‘சந்திரசேகர ராவ் தன்னை இன்னொரு நிஜாமாக கருதிக் கொள்கிறார். தேசத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியும் அவசியம் என்பதை அவர் மறந்து விட்டார். இது பிரதமர் மோடியின் கனவு. நலத் திட்டங்களை வகுப்பதில் ஒன்றிய அரசும், நிதி ஆயோக்கும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக தெலங்கானாவின் வளர்ச்சியில் சந்திரசேகர ராவ் அக்கறை காட்டவில்லை. ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகம் ஒதுக்கிய நிதியை பயன்படுத்திக் கொள்ள முடியாததில் இருந்தே தெலங்கானா அரசின் இயலாமை தெரிகிறது,’ என்றார்.

Related Stories: