சென்னை: வங்கக் கடலில் ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் இன்று கரையைக் கடந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்லும். இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் தீவிரம் அடைந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிக்கு நகர்ந்து சென்றது. அது தற்போது ஒடிசாவை ஒட்டிய கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அது இன்று கரையைக் கடந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.