10 ஆண்டுக்கு முன் விரலை வெட்டியதால் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: திருத்தணியில் நள்ளிரவில் பயங்கரம்; 10 மணி நேரத்தில் 3 பேர் கைது

சென்னை: பத்து ஆண்டுகளுக்கு முன்பு விரலை வெட்டியதற்கு பழிக்கு பழியாக, திருத்தணியில் திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருத்தணி அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (38), திமுக பிரமுகர். தற்போது ஜெ.ஜெ.ரவி நகர் வனதுர்க்கை அம்மன் கோயில் தெருவில் உள்ளார். இவரது மனைவி கல்பனா (30). இவர்களுக்கு மரகதம் (9), அவந்திகா (5) என்ற மகள்களும், தமிழரசன் (7) என்ற மகனும் உள்ளனர். திருத்தணி பஸ் நிலையம் அருகே குளிர்பான கடை வைத்துள்ள மோகன், ரியல் எஸ்டேட் , பைனான்ஸ், கொலை முயற்சி வழக்குகள் உள்ளது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு கடையில் இருந்து பைக்கில் வீட்டுக்கு மோகன் புறப்பட்டார். வீட்டின் அருகே சென்றதும் ஒரு கும்பல், மோகனை சுற்றி வளைத்துள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், மார்பு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த மோகன் ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கொலையாளிகள் தப்பிவிட்டனர். தகவலறிந்து வந்த திருத்தணி போலீசார், மோகன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் எஸ்பி சிபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தனிப்படை போலீசார், கொலையாளிகளை தீவிரமாக தேடினர். அப்போது வேலஞ்சேரி கூட்டுச் சாலையில் சந்தேகத்தின் பேரில் நின்ற 3 பேரை பிடித்தனர்.

அவர்கள் விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: திருத்தணி ஜோதி நகரை சேர்ந்த சஞ்சய் என்கிற சஞ்சய் குமாரின் (23), சித்தப்பா சிவாவை கடந்த 2012ம் ஆண்டு மோகன் வெட்டியுள்ளார். இதில் சிவாவின் விரல் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அதற்கு பழிக்குப் பழிவாங்கவே ேமாகனை கொலை செய்ததாக 3 பேரும் போலீசாரிடம் கூறி உள்ளனர். மேலும் கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த சஞ்சய்குமாரின் உறவினர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வீரவேல் மகன் நித்திஷ் (19), திருத்தணி பெரியார் நகரை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (22) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் சுமார் 10 மணி நேரத்தில் கைது செய்தனர்.

Related Stories: