தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கையடக்க கணினியை கொண்டு 185 ரயிலில் டிக்கெட் பரிசோதனை: சேலம் கோட்டத்திற்கு 124 கருவி வழங்கல்

சேலம்: தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கையடக்க கணினியை கொண்டு 185 ரயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் கோட்டத்திற்கு 124 கருவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ரயில்களில் டிக்கெட் பரிசோதனையை எளிமையாக்கி நவீனப்படுத்தும் வகையில் கையடக்க கணினி (ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல்கள்) பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. வழக்கமாக முன்பதிவு பெட்டிகளில் பயணச்சீட்டு பரிசோதகர்கள், பயணிகளின் பயண சீட்டுகளை தங்களிடமுள்ள அச்சிடப்பட்ட பயணிகள் பட்டியலை (சாட் பேப்பர்) பார்த்து சோதனை செய்வார்கள். தற்போது இந்த பயணிகள் பட்டியல் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக தெற்கு ரயில்வேயில் பயண சீட்டு பரிசோதகர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயண சீட்டுகளை எளிதாக சரிபார்க்க முடியும். பரிசோதகர்களின் செயல்திறன் மேம்படும். காலியாக உள்ள இருக்கைகள், படுக்கைகள் விவரம் உடனடியாக முன்பதிவு மையங்களுக்கு அனுப்பப்படும். இதனால், வழியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் காத்திருக்கும் பயணிகள், இந்த காலியிடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த வெளிப்படை தன்மையுள்ள, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதம் இல்லா பரிசோதனை முறை பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனுள்ளமாக மாறியுள்ளது.

தெற்கு ரயில்வேக்கு மொத்தம் 857 கையடக்க கணினிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில், சென்னை கோட்டத்திற்கு 246, திருச்சி கோட்டத்திற்கு 101, மதுரை கோட்டத்திற்கு 98, திருவனந்தபுரம் கோட்டத்திற்கு 148, பாலக்காடு கோட்டத்திற்கு 140, சேலம் கோட்டத்திற்கு 124 கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு, கேரளாவில் இயங்கும் 185 ரயில்களில் 800 கையடக்க கணினிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வசதியை இன்னும் அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சோதனை அடிப்படையில் முதலில் மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ், திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தனர். தற்போது இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 185 ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் பயன்படுத்துவதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

Related Stories: