கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள முஷ்டக்குறிச்சியில் பழமையான சிற்பம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு சக்திபாலன் என்பவர் தகவல் கொடுத்தார். இதனைதொடர்ந்து பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர் கோவிலாங்குளம்பட்டியைச் சேர்ந்த ஜெ.செல்வம் மற்றும் தேவாங்கர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் கடந்த 6ம் தேதி அன்று அந்த சிற்பத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், இந்த சிற்பமானது முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தவை. ஒரே பலகைக் கல்லில் புடைப்பு சிற்பமாக வடிக்கும் கலாசாரம் தெற்கே பாண்டிய நாட்டிலும், வடக்கே பல்லவ நாட்டிலும் பரவி இருந்தது. இந்த நடுகல் அரச மகளிர் அல்லது ஒரு உயர்குடி பெண்ணிற்காக எடுக்கப்பட்டதாகும். பெண்ணின் உருவம் வலது கையில் ஏதோ பொருள் ஒன்றை வைத்துள்ளது போல் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பம் சிதைவடைந்த நிலையில் இருப்பதால் அது என்ன பொருள் என்று தெளிவாக தெரியவில்லை. அவரின் இடது கை அவரது குழந்தையின் தலையில் கை வைத்து அரவணைப்பது போல் உள்ளது.