திருப்புவனம்: திருப்புவனம் அருகே முதுவன்திடலில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாத்திமா பள்ளிவாசல் முன்பாக இந்துக்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் காலப்போக்கில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். தற்போது முஸ்லீம்கள் ஒருவர் கூட இங்கு இல்லை. ஆனால் அவர்கள் வழிபட்ட பாத்திமா பள்ளிவாசல் மட்டும் இங்கு இன்றும் உள்ளது.
இந்த பாத்திமா பள்ளிவாசலை புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. பாத்திமாவை தங்களின் கிராம தேவதையாக கருதி இப்து முறைப்படி காப்புக்கட்டி ஒருவாரம் விரதமிருந்து பூக்குழி திருவிழாவாக வருடம்தோறும் இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று மொகரம் பண்டிகை என்பதால் பள்ளிவாசல் முன்பாக குழி வெட்டி விறகுகளை போட்டு தீ வளர்த்து அதிகாலையில், விரதமிருந்த பக்தர்கள் கண்மாயில் நீராடிய பின் வரிசையாக இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்காக ஒரு வாரம் முன்னதாக இந்துக்கள் பள்ளிவாசலில் காப்பு கட்டி விரதமிருந்தனர். மற்ற ஊர்களில் தீ மிதி திருவிழாவில் தீ கங்குகள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும்.