குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டுஆண்கள், பெண்களுக்கான படகு போட்டி: சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு

தென்காசி: குற்றாலம் சாரல் திருவிழாவையொட்டி ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடந்த படகு போட்டியில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகள், பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் தினமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஐந்தருவி வெண்ணமடை படகு குழாமில் சுற்றுலா பயணிகளுக்கு இடையே படகு போட்டியை நேற்று கலெக்டர் ஆகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் ராஜேஸ்வரி வரவேற்றார். இதில், ஆண்கள், பெண்களுக்கு என்று தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான நான்கு இருக்கைகள் கொண்ட படகு போட்டியில் குற்றாலத்தைச் சேர்ந்த அருண், பழனி, செந்தில், மூர்த்தி குழுவினர் முதலிடமும், குற்றாலத்தை சேர்ந்த இசக்கிராஜ், முத்துராஜ், சுப்புராஜ், வசந்த் குழுவினர் இரண்டாம் இடமும் பெற்றனர்.

பெண்களுக்கான நான்கு இருக்கைகள் கொண்ட போட்டியில் சாம்பவர் வடகரையை சேர்ந்த முருகலட்சுமி, மூக்கம்மாள், சரண்யா, செய்யது அலிபாத்திமா குழுவினர் முதலிடமும், தூத்துக்குடியை சேர்ந்த சவுரியா, பிச்சை, பிரியா குழுவினர் இரண்டாமிடமும் பெற்றனர். இரண்டு பேர் இருக்கையில் கொண்ட ஆண்களுக்கான போட்டியில் குற்றாலத்தை சேர்ந்த சுப்புராஜ், சந்தோஷ் முதலிடமும், குற்றாலத்தைச் சேர்ந்த முத்துராஜ், இசக்கிராஜ்  இரண்டாமிடமும் பெற்றனர்.

போட்டியில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.2 ஆயிரத்துக்கான காசோலையும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.ஆயிரத்துக்கான காசோலையை பழனி நாடார் எம்எல்ஏ வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்த நாராயணன் நன்றி கூறினார்.

Related Stories: