தென்காசி: குற்றாலம் சாரல் திருவிழாவையொட்டி ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடந்த படகு போட்டியில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகள், பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் தினமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஐந்தருவி வெண்ணமடை படகு குழாமில் சுற்றுலா பயணிகளுக்கு இடையே படகு போட்டியை நேற்று கலெக்டர் ஆகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் ராஜேஸ்வரி வரவேற்றார். இதில், ஆண்கள், பெண்களுக்கு என்று தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான நான்கு இருக்கைகள் கொண்ட படகு போட்டியில் குற்றாலத்தைச் சேர்ந்த அருண், பழனி, செந்தில், மூர்த்தி குழுவினர் முதலிடமும், குற்றாலத்தை சேர்ந்த இசக்கிராஜ், முத்துராஜ், சுப்புராஜ், வசந்த் குழுவினர் இரண்டாம் இடமும் பெற்றனர்.