காரைக்குடி: காரைக்குடி அருகே வேலங்குடியை சேர்ந்தவர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் குடும்பத்துடன் மதுரை அழகர்கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர். காரைக்குடி அருகே வேலங்குடியை சேர்ந்த மக்கள் ஒவ்வொரு வருடமும் மதுரை மாவட்டம், அழகர்கோவில் 18ம்படி கருப்பர் கோயிலில் நடக்கும் தேரோட்டத்துக்கு செல்வது வழக்கம்.
இதற்காக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் 22 மாட்டு வண்டிகளில் (கூட்டு வண்டி) கோயிலுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றம் சமையல் பொருட்களை எடுத்து கொண்டு பயணம் மேற்கொள்கின்றனர். ஆக.10ம் தேதி அழகர்கோவில் செல்லும் இவர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு ஆக.12ம் தேதி 18ம்படி கருப்பருக்கு நடக்கும் தேரோட்டத்தில் தேர் வடம் இழுத்துவிட்டு மீண்டும் சனிக்கிழமை ஊர் திரும்புகின்றனர். பராம்பரிய முறைப்படி கடந்த 5 தலைமுறைக்கு மேல் இதுபோன்று மாட்டு வண்டியிலேயே சென்று வருவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.