குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள பச்சை ரோஜா அனைவரையும் கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுள் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியமான ஒன்று. ஆண்டுத்தோறும் கோடை விழா நாட்களில் இங்கு பழக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இப்பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர் செடிகள் உள்ள நிலையில், சிறப்பாக பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் பல வண்ணங்களிலான ரோஜா மலர்களும் அடங்கும். இந் நிலையில் சிம்ஸ் பூங்கா பசுமைக்குடிலில், பச்சை ரோஜா வளர்க்கப்பட்டு வருகிறது. பூங்கா நிர்வாகக்தின் புதிய முயற்சியாக வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட பச்சை ரோஜா கட்டிங் தொட்டியில் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது பசுமைக்குடியில் வளர்க்கப்படும் ஒரு பச்சை ரோஜா மலர்ந்துள்ளது. இதனை பாதுகாப்புடன் வளர்த்து பூங்கா முழுவதிலும் நடவு செய்ய தோட்டக்கலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர். சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர்.