போடி: போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அகமலை துவங்கி குரங்கணி, கொட்டகுடி, கொழுக் குமலை, போடி மெட்டு உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் எல்லைப்பகுதியாக போடிமெட்டு மற்றும் கொட்டகுடி ஊராட்சியில் இருக்கும் டாப் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிகள் யாவும் அடர்ந்த வனங்கள் இருக்கும் நிலையில், ஏலம், காபி, மிளகு, ஆரஞ்சு, மா, பலா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்டவற்றின் சாகுபடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன்படி இரு மாநில எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக தென்மேற்கு பருவமழை சிறு தூறலாக துவங்கி கனமழையாகவும், பெருமழையாகவும் தொடர்ந்து வருகிறது. தொடர் மழை காரணமாக மலைகளிலிருந்து வரும் தண்ணீர் சேர்த்து பெரும் காட்டாறு போல் ஆங்காங்கே மாறுகிறது. இதன்படி சாம்பலாற்று அணையினை கடந்து வரும் வெள்ளம் தொடர்ந்து கொட்டக்குடி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.