கரூர் புகழிமலையில் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்... கிமு 1ம் நூற்றாண்டிலேயே பள்ளிக்கூடம் நடத்திய சமணர்கள்

சமணர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிககளில் வசித்து வந்துள்ளனர். கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிமு 10ம் நூற்றாண்டுகள் வரை வாழ்ந்து வந்ததாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் பல்வேறு இடங்களில் பரவி கிடக்கும் பிராமி கல்வெட்டுகள் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் குகைகளில் வாழ்ந்த போது, அவர்கள் மூலிகை செடிகளை வைத்து மீன், பெண், ஆண், குளம் என பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளனர். அவர்கள் வாழ்ந்ததற்கான கல்வெட்டுகளையும் செதுக்கி உள்ளனர். இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னால், தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளனர். சிலப்பதிகாரத்தில் கூட அவர்களின் பங்கு இருப்பதாக நிகண்டுகள் தெரிவிக்கின்றன.

பத்திரப்பாகு (கி.மு 327&297) என்ற சமண முனிவர் அல்லது சமணப்பெரியவர் தான் முதன் முதலில் கொங்கு நாடு வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். இவர் பவுத்தம், சமணம் என்று சொல்வார்களே... அதில் சமண மதத்தை பரப்புவதற்காக கொங்கு மண்டலம் வந்துள்ளார். இதற்கான அடையாளங்கள் தற்போதைய கரூர் மாவட்டத்தில் புகழிமலை, சுக்காலியூர் மலை, காக்கா பறக்காத மலை என்று வர்ணிக்கப்படும் அய்யர்மலை, வைகை நல்லூர் குண்டாங்கல் மலை, தீண்டாக்கல்மலை போன்ற இடங்களில் விரவி கிடக்கிறது. சமணர்களால் உருவாக்கப்பட்ட சமண படுக்கைள் மற்றும் அங்கு எழுதப்பட்டிருக்கும் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இருந்தும் கொங்கு நாட்டில் சமணம் தழைத்தோங்கி இருந்தது என்பதை அறிய முடியும்.

சமணர்கள் ஏழை எளியவர்களுக்கு உணவளித்தல், நோயாளிகளுக்கு மருத்துவ சேவை, சிறுவர்களுக்கு கல்வி சேவை போன்ற பணிகளையும் மேற்கொண்டனர் என்பது சிறப்பு தகவல். அன்னதானம், அபயதானம், ஒளடத தானம், சாத்திர தானம் என்று சமணர்களின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நால்வகை தானங்களை செய்த சமணர்கள் கரூர் பகுதியில் உள்ள சில குகைகளில் வாழ்ந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, படுக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி என்னவென்றால், படுக்கை அமைத்த சமணர்கள் தலைக்கு மேடும் (தலையணை) அமைத்துள்ளனர் என்பது அவர்களின் அறிவாற்றலை வெளிப்படுத்துகிறது.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை சமணர் படுக்கை சமணர்கள் வந்து தங்கி பல்வேறு சேவைகளை செய்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக விளங்குகிறது. கரூரில் இருந்து 20கிமீ தூரத்தில், கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலாயுதம்பாளையம் மலைக்கு புகழிமலை அல்லது ஆறுநாட்டார் என்ற பெயரும் உள்ளது. இந்த மலையில் 22 சமணர்ப்படுக்கைகளும், 7க்கும் மேற்பட்ட பண்டைய தமிழ் (பிராமி) கல்வெட்டுகளும் உள்ளன. கி.மு 1ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கல்வெட்டுகளில், பதிற்றுப்பத்து இலக்கியத்தில் சேர மன்னர்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூர், அருகில் உள்ள ஆத்தூர், அந்த பகுதியில் வாழ்ந்த செங்காயப்பன் என்ற சமணர் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மேலும் சமணர்கள் அப்போதே பள்ளி கூடம் நடத்தி பாடம் எடுத்துள்ளனர். அந்த பள்ளிக்கு சமணப்பள்ளி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இளஞ்சேரல் இரும்பொறை என்ற சேரன் மன்னன், சமணர்களுக்கு படுக்கைகள் தயார் செய்து வழங்கியதாக தெரிகிறது. சமணர்களின் சமுதாய பணியை பாராட்டி, சமணர்களுக்கு பொதுமக்கள் கூட அவர்கள் தங்குவதற்கு படுக்கைகள் செய்து கொடுத்துள்ளனர். மேற்கண்ட விவரங்கள் எல்லாம் புகழிமலை கல்வெட்டியில் பொறிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இதனடிப்படையில், வரலாற்றில் கரூர் புகழிமலை சமணர்களின் புகழ் பரப்பும் அச்சாரமாக விளங்கி வருகிறது என்பதை உணர முடியும்.

Related Stories: