ஈரோடு: ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த ஆசிப் முசாப்தீன் (27), தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக தகவல் அறிந்து, கடந்த மாதம் 26ம் தேதி அவரது வீட்டில் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அவரிடம் ஸ்மார்ட் போன்கள், டைரிகள், சிம்கார்டுகளை கைப்பற்றினர். விசாரணையில், ஆசிப் முசாப்தீன் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உறுப்பினராக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆசிப் முசாப்தீன் மீது உபா சட்டம் உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவர் நேற்று ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, போலீஸ் தரப்பில் ஆசிப் முசாப்தனை காவலில் விசாரிக்க உள்ளதால் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிபதி மாலதி, வரும் 10ம் தேதி மாலை வரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, அவரை போலீசார் அழைத்து சென்று ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.