விவசாயிகள், தொழில்துறைக்கு அடுத்த ஆபத்து கூறுபோடப்படும் மின்துறை

எல்லாமே தனியார்மயம் என்றால் அரசு எதற்கு என்ற கேள்வி எழுகிறது. மக்களிடம் வசூலிக்கும் வரிக்கு, சேவை செய்யவே ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒரு அரசை தேர்ந்தெடுக்கிறார்கள். நம் நாட்டில் ஒன்றிய அரசு சார்பில் கட்டி காத்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள், சமீப காலமாக ஒவ்வொன்றாக தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது. ரயில்வே, விமானத்துறை, சுகாதாரம், எல்ஐசி, தொலைதொடர்பு துறை என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்தும் தனியாருக்கு படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் பலன்கள் அனைத்தும் ஒரு சில தொழிலதிபர்களுக்கே போய் சேர்கிறது. இவர்களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தற்போது மின்சார சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. சமீப காலமாக தொழிலதிபர்கள் நிறுவனங்களின் ஆதரவாக பல்வேறு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

உதாரணத்துக்கு வேளாண் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில்,  விவசாயிகளிடம் இருந்து தனியார்களே நேரடியாக கொள்முதல் செய்யலாம், குறைந்தபட்ச ஆதார விலை கிடையாது, விளை நிலத்தை தனியார்கள் குத்தகைக்கு எடுத்து தாங்கள் சொல்லும் பொருட்களை உற்பத்தி செய்யலாம் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை முற்றுகையிட்டு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பல மாதங்களாக போராடினர். அவர்கள் மீது போலீசார் கொடூர தாக்குதலை நடத்தினர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர். ஒன்றிய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. போராட்டம் வலுத்ததால், இந்த சட்டத்தை ஏன் நிறுத்தி வைக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, வேளாண் சட்டத்தை வாபஸ் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால், இந்த சட்டத்தில் திருத்தம் செய்து மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது, இதேபோல் ஒரு பெரிய கொந்தளிப்பை விவசாயிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்களிடையே ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று ஒன்றிய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மின்சார சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மின்வாரியம் தனியாருக்கு ஒப்படைக்கப்படும். ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையமே கட்டணத்தை நிர்ணயிக்கும். இதனால், கட்டணம் தாறுமாறாக எகிறும். தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் இலவசம் என்ற திட்டம் ரத்தாகும். வேலைவாய்ப்பு, மானியம் பறிபோகும். இதனால், இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மின்துறை ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மின் வாரியம் தனியார் நிறுவனங்களுக்கு கூறு போடப்படும். இதனால், ஏழை மக்கள் முதல்

நாட்டின் பொருளாதாரம் வரை முடங்கும் அபாயம் உள்ளது.

Related Stories: