கொலை வழக்கில் அப்ரூவராக மாற முயன்றதால் கத்தியால் சரமாரி குத்தி ரவுடி கொலை; மது அருந்த வைத்து தீர்த்துக்கட்டினர்: நண்பர்கள் 5 பேர் பிடிபட்டனர்

புழல்: கொலை வழக்கில் அப்ரூவராக முயன்ற ரவுடியை, மது அருந்த வைத்து சராமாரி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் செங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (எ) சுப்பிரமணி (24). ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த், வினோத் (எ) உருளை வினோத், விஜய், வீரராகவன், வெங்கடேசன். இவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பைக்கில் ரமேஷ் வீட்டுக்கு வந்து கதவை தட்டினர். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ரமேஷ் எழுந்து கதவை திறந்து வெளியே வந்தார்.

நண்பர்களை பார்த்ததும், ‘‘இந்நேரத்தில் எதற்காக வந்தீர்கள்’’ என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், ‘‘மது அருந்தலாம் வா’’ என அழைத்தனர். நண்பர்கள் அழைக்கிறார்களே என்பதால், வேறு வழியில்லாமல் அவர்களுடன் பைக்கில் புறப்பட்டார் ரமேஷ். வழக்கமாக மது அருந்தும் இடமான நல்லூர் ஆட்டந்தாங்கல் சோழவரம் உபரிநீர் கால்வாய் ஓரத்துக்கு சென்றனர். அங்கு அனைவரும் அமர்ந்து மது அருந்தினர்.

போதை தலைக்கேறியதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் வினோத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமேஷை சரமாரியாக குத்தினார். இதை சற்றும் எதிர்பாராத அவர், ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். இதையடுத்து வினோத் உள்ளிட்ட நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போராடிய ரமேஷை பார்த்து, உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததும், ரமேஷை, அதில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பாடியநல்லூர் அரசு ஆரம்ப நிலையத்தில் ரமேஷ் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த சோழவரம் போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த வீரராகவன் (25), விஜய் (25), வெங்கடேசன் (27), அரவிந்த் (20),  வினோத் என்ற உருளை வினோத் (22) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக ரமேஷ் அப்ரூவராகி நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல திட்டமிட்டதால், அவரை அழைத்து சென்று மது அருந்த வைத்து கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: