தனிமனித சுதந்திரம் பாதிப்பு; உச்ச நீதிமன்றம் மீதான நம்பிக்கை போய்விட்டது; மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சாடல்

புதுடெல்லி: ‘‘உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய் விட்டது,’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில் சிபல் கடுமையாக சாடியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் பேசியதாவது: நீதிமன்ற தீர்ப்புக்கும் யதார்த்தத்துக்கும் இடையே மிக பெரிய வேறுபாடு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. எனது 50 ஆண்டுகால அனுபவத்தில் இருந்து இதனை கூறுகிறேன்.

முக்கியமான சர்ச்சைக்குரிய வழக்குகள் என்றால் அவை ஒருசில நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படும். அவர்கள் ஆஜராகும் பட்சத்தில் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். அமலாக்கத்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுபாடற்ற சுதந்திரம் தனிமனித சுதந்திரத்துக்கு பெரும் ஆபத்தாகும்.  இந்த வகையான சட்டங்கள், தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கும் போது, அதன் மீது எப்படி நம்பிக்கை வைப்பது? தனிமனித உரிமை தீர்ப்பில் அதனை பாதுகாக்க வேண்டிய காவல்துறையும், அரசு நிர்வாகமுமே அதனை காற்றில் பறக்கவிடுகின்றன,’’ என்று வேதனை தெரிவித்தார்.

Related Stories: