இந்திய கடல் எல்லையில் அத்துமீறிய பாக். போர் கப்பல் துரத்தி அடிப்பு

புதுடெல்லி: இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் கப்பலை இந்திய கடலோர காவல்படை விமானம் துரத்தி அடித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தது  பிஎன்ஸ். ஆலம்கீர் கப்பல்.  இந்த கப்பல் சமீபத்தில் குஜராத் கடற்பகுதியில் இரு நாடுகளின் கடல் எல்லை கோடு பகுதியை கடந்து இந்திய பகுதிக்குள் நுழைந்தது. உடனடியாக இதை அறிந்த இந்திய கடற்படையினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிக்கு தகவல் அளித்தனர்.

அந்த பகுதிக்கு விரைந்த இந்திய கடலோர காவல் படையின் டோர்னியர் கண்காணிப்பு விமானம், பாகிஸ்தான் போர்க் கப்பலின் இருப்பிடம் குறித்து எச்சரிக்கை விடுத்ததுடன் அதன் பகுதிக்குத் திரும்பும்படி வலியுறுத்தியது. டோர்னியர், ஆலம்கிர் மீது வட்டமிட்டுக் கொண்டே இருந்தது.  இந்திய தரப்பினர் பாகிஸ்தான் கப்பல் கேப்டனுடன் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை. இதையடுத்து டோர்னியர் விமானம் மூன்று முறை பாகிஸ்தான் போர்க்கப்பலுக்கு முன்னால் பறந்து சென்று எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து பின்வாங்கிய ஆலம்கீர், பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பி சென்றது. இந்த தகவலை இந்திய கடற்படையினர் நேற்று வெளியிட்டனர்.

Related Stories: