கர்நாடகாவில் இருந்து கோவை வழியாக ராணுவ ரேடார் கட்டுப்பாட்டு அறைகள் இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பி வைப்பு

மதுக்கரை: கர்நாடகாவில் இருந்து கோவை வழியாக ராணுவ ரோடார் கட்டுப்பாட்டு அறைகள் இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு பிரிவில் ஏராளமான பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நவீன தொழில்நுட்பங்களில் அடிக்கடி மேம்படுத்துதல் பணி செய்ய வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில், ராணுவத்தில் பாதுகாப்பு பணிகளுக்கும், எதிரிகளுடனான சண்டைக்கும் பயன்படுத்தப்படுகின்ற ரேடார் கருவிகள் அடங்கிய கட்டுப்பாட்டு அறைகளுக்கான உபகரணங்களை மேம்படுத்த ராணுவம் திட்டமிட்டது. அதன்படி, 18 உயர்ரக கருவிகளை உள்ளடக்கிய கட்டுப்பாட்டு அறைகளில் நவீன தொழில் நுட்பத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு அவற்றை இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்புகின்றனர்.

இதற்காக, 18 கட்டுப்பாட்டு அறைகள் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு கோவை எல் அன்டு டி பைபாஸ் வழியாக நேற்று கேரளாவுக்கு கனரக லாரியில் கொண்டு செல்லப்பட்டன. அவை, கொச்சின் துறைமுகத்திலிருந்து கப்பல் வழியாக இஸ்ரேல் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்தி நவீன உபகரணங்களை பொருத்திய பின்னர் இந்தியாவுக்கு வரவழைக்க உள்ளனர்.இந்நிலையில், நேற்று கோவை எல் அன்டு டி பைபாஸ் ரோடு வழியாக கொச்சின் செல்ல லாரிகளில் அணிவகுத்து வந்த ராணுவ ரேடார் கட்டுப்பாட்டு அறைகள் தமிழ்நாட்டின் எல்லை பகுதியான வாளையாறில் கேரளா கண்காணிப்பு குழுவுடன் ஒப்படைத்தனர். இக்குழுவினர் துறைமுகம் வரை சென்று இஸ்ரேலுக்கு ராணுவ உபகரணங்களை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: