ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு மோடிக்கு ராக்கி அனுப்பிய பாக். பெண்

புதுடெல்லி: ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, பிரதமர் மோடிக்கு, அவரது பாகிஸ்தானிய சகோதரி கமர் மொஷின் ஷேக் ராக்கி கயிறு மற்றும் வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த கமர் மொஷின் ஷேக் என்பவர் தனது திருமணத்துக்குப்பின், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கிறார். ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, இவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ராக்கி கட்டுவது வழக்கம். கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இவர் தபாலில் ராக்கி கயிற்றை அனுப்பினார். இந்தாண்டும் அவர் எம்பிராய்டரி வேலைபாடுகளுடன் தானே தயாரித்த ராக்கி கயிறு மற்றும் வாழ்த்து அட்டையை பிரதமர் மோடிக்கு தபால் மூலம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து கமர் மொஷின் ஷேக் கூறுகையில், ‘இந்த முறை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். அவர் என்னை டெல்லி அழைப்பார் என நம்புகிறேன். ரேஷ்மி ரிப்பனில் எம்பிராய்டரி வேலைபாடுகளுடன் ராக்கியை அவருக்காக செய்துள்ளேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும். 2024ம் ஆண்டு தேர்தலிலும் அவர் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராவார்’ என்றார்.

Related Stories: