லாரி மீது கார் மோதி விபத்து 3 பெண்கள் உள்பட 5 பேர் நசுங்கி பலி: திருப்பதி கோயிலுக்கு சென்றபோது பரிதாபம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இன்று காலை சென்றபோது சிமெண்ட் லோடு லாரி மீது கார் மோதியது. இதில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சிரிகிபாடு பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்றிரவு காரில் புறப்பட்டனர். பிரகாசம் மாவட்டம் அமராவதி-அனந்தபுரம் நெடுஞ்சாலை கம்பம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே இன்று காலை சென்று கொண்டிருந்தனர். அப்போது சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிய லாரி முன்னால் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கார் முந்த முயன்றதாக தெரிகிறது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரி மீது மோதியது. இதில் கார் நசுங்கியது. அதில் பயணம் செய்த குருவம்மா(60), அணிமிரெட்டி(60), ஆனந்தம்மா(55), ஆதிலட்சுமி(58), நாகிரெட்டி(24) ஆகியோர் பலத்த காயமடைந்து உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.தகவலறிந்த வேல்துருத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இடிபாட்டில் சிக்கிய சடலங்களை நீண்ட நேரமாக போராடி மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி 5 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: