எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழப்பு இஸ்ரோ அறிவிப்பு

சென்னை: ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து நேற்று காலை ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி வகை சிறிய ராக்கெட் இரண்டு செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்ற நிலையில், இரண்டு செயற்கைக்கோள்களும் செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து நேற்று காலை 9.18 மணிக்கு இந்தியா முதல்முதலாக எஸ்.எஸ்.எல்.விடி வகை சிறிய ராக்கெட்டை 2 செயற்கைக்கோள்களுடன் ஏவியது. இதில், இ.ஒ.எஸ்02 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளும், ஆசாதிசாட் என்ற செயற்கைக்கோளும் அனுப்பப்பட்டன. ஆசாதிசாட் செயற்கைக்கோளானது நாடு முழுவதும் 75 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகள் இணைந்து உருவாக்கியதாகும்.

இந்த 2 செயற்கை கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட்டை இஸ்ரோ நேற்று விண்ணில் செலுத்தியது. ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள்களை பிரிக்கும் பணிகளை மேற்கொண்டபோது, செயற்கை கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. கடைசி நிலையில் ஏற்பட்ட தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாடு இழப்புதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. சிக்னல் கிடைக்காத காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் நீண்ட நேரம் போராடினர். ஆனால், அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘இந்த ராக்கெட், செயற்கைக்கோள்களை 356 கிமீ  வட்ட சுற்றுப்பாதைக்கு பதிலாக 356 கிமீ x 76 கிமீ நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. அந்த செயற்கைக்கோள்களை இனி பயன்படுத்த முடியாது. சென்சார் செயலிழப்பே தோல்விக்கு காரணம். சென்சார் செயலிழப்பைக் கண்டறிந்து, செயற்கைக் கோள்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. இதற்காக குழு அமைக்கப்பட்டு தோல்வி குறித்து ஆராயப்படும். விரைவில் எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் உருவாக்கப்படும்’ என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Related Stories: