சென்னை: வரும் 13 முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்தார். சென்னை அரும்பாக்கதில் உள்ள தனியார் கல்லூரியில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்கை வரலாறு குறித்து ஓலம் என்ற காணொலி வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், கல்லூரியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: தென்னிந்திய ஆய்வு படிப்பு மையம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஓலம்’ காணொலியானது வளமான பாரதத்தை சூழ்ச்சியின் காரணமாக வீழ்த்தி மீண்டும் எழுச்சி கண்ட கதையை விளக்குகிறது.