சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி கடந்த 7 நாளில் நடந்த சோதனையில் 493 கிலோ குட்கா புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’’மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில்.
காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 31.07.2022 முதல் 06.08.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 143 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 493 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 62.2 கிலோ மாவா, ரொக்கம் 4,000/, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 இலகுரக வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.