திருவனந்தபுரம்: ரகசியமாக ஆபாச படங்களை எடுத்து மிரட்டி கல்லூரி மாணவியை லாட்ஜுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல டிக் டாக் நடிகரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின்கீழ் பகுதியைச் சேர்ந்தவர் வினீத் (25). பிரபலமான டிக்டாக் நடிகர். அவர் டிக் டாக்கில் எந்த வீடியோ வெளியிட்டாலும் ஒரு சில நிமிடங்களிலேயே அது வைரலாகிவிடும். ஆகவே அவருக்கு சமூக வலைதளங்களில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். வினீதுக்கு கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
நாளடைவில் 2 பேரும் மிகவும் நெருக்கமானார்கள். அதன்படி வீடியோ கால் மூலம் அடிக்கடி 2 பேரும் பேசி வந்து உள்ளனர். அப்போது மாணவிக்கு தெரியாமல் அவரை வினீத் ஆபாசமாக படம் எடுத்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிக்டாக்கில் எப்படி பிரபலமடைவது என்று சொல்லித் தருகிறேன் என்று மாணவியிடம், வினீத் கூறி உள்ளார். இதை நம்பிய கல்லூரி மாணவி, வினீத்தின் அழைப்பின் பேரில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜுக்கு சென்று உள்ளார். அப்போது வினீத், மாணவியின் ஆபாச புகைப்படங்களை காண்பித்து உள்ளார். பின்னர் கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து மாணவி திருவனந்தபுரம் தம்பானூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினீத்தை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை சோதனை செய்து பார்த்தனர். அப்போது செல்போனில் கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அது மட்டுமல்லாமல் பல இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் இருந்தது தெரியவந்தது. இது தவிர சிலருடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களும் இருந்தன. இதே போல மேலும் பல இளம்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.