நியூயார்க்: உலகம் முழுவதும் 54 லட்சம் பயனர்களின் கணக்கு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு, கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட விவகாரம் உண்மை என்பதை டிவிட்டர் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதளமான டிவிட்டரில், கடந்த ஆண்டு 54 லட்சம் பயனர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு, அதை திருடிய ஹேக்கர், குறிப்பிட்ட ஒரு தளத்தில் ரூ.24 லட்சத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தார். இந்த விவகாரம் டிவிட்டர் பயனர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தகவல் பாதுகாப்பு தொடர்பாக டிவிட்டர் நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தை விசாரித்தது. இதில், உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் பாதிக்கப்பட்டது உண்மைதான் என்பதை டிவிட்டர் நிர்வாகம் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. ஆனாலும், எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள், யார், யார் கணக்குகள் பாதிக்கப்பட்டது என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளது.