அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் அளித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உச்சகட்ட பிரச்னை எழுத்துள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி அதிமுக பொதுக்குழு கடந்த மாதம் 11ம் தேதி நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திடீரென ஓ.பன்னீர்செல்வம் சென்றதால், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம் நுழைந்தார். மேலும் அங்கு நடந்த வன்முறையில் பொதுமக்களின் வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு சட்டப்படி சீல் வைக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.   

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும். அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்கு அதிமுக அலுவலகத்துக்கு தொண்டர்களை அனுமதிக்க கூடாது என கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராக நான் பதவி வகிக்கிறேன். அதனை கருத்தில் கொள்ளாமல் அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தவறான ஒன்றாகும். அதனால் அதனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மனுவானது விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: