கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான அமைச்சரவையில் நேற்று 5 கேபினட் அமைச்சர்கள் உட்பட 9 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனால், அவருடைய பதவி பறிக்கப்பட்டு, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த திங்களன்று அறிவித்தார்.
இதன்படி, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. இதில், 5 கேபினட் அமைச்சர்கள் உட்பட 9 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆளுனர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்களில் 8 பேர் புதிய முகங்கள். முன்னாள் ஒன்றிய அமைச்சர் பபுல் சுப்ரியோ, உதயன் குகா, பார்த்தா பவ்மிக், சினேஹாசிஸ் சக்ரபோர்த்தி மற்றும் பிரதீப் மசூம்தர் உள்ளிட்டோர் கேமினட் அமைச்சர்களாகி உள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வரும் நிலையில், முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.