‘சமரசம்’ செய்ய ஒத்துக் கொள்ளாததால் ஏ லிஸ்ட் நடிகர்கள் என்னுடன் நடிக்க மறுத்தனர்: மல்லிகா ஷெராவத் பகீர்

மும்பை: இந்திய திரையுலகில் நடக்கும் ‘சமரசம்’ தனது வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் (45), வெளிப்படையாக கூறியுள்ளார். நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காத அவர், தற்போது சேனல் ஒன்றுக்கு அளித்த அளித்த பேட்டியில், ‘சினிமாவில் நான் நடிக்கும் போது திரைத்துறையில் கொடிகட்டி பறக்கும் முன்னணி (ஏ-லிஸ்ட்) நடிகர்களுடன் நான் சமரசம் செய்யத் தயாராக இல்லாததால், அவர்கள் அனைவரும் என்னுடன் பணியாற்ற மறுத்துவிட்டனர். அவர்களை பொருத்தமட்டில் தங்களுக்கு கட்டுப்படக்கூடிய மற்றும் அவர்களுடன் சமரசம் செய்யக்கூடிய நடிகைகளை தான் விரும்புகிறார்கள். நான் அப்படியல்ல; யாருடைய ஆசைகளுக்கும் அடிபணிய விரும்பவில்லை. அவர்கள் பாணியில் கூறவேண்டுமானால், சமரசம் என்பது அவர்கள் உட்கார சொன்னால் உட்கார வேண்டும். எழுந்திருக்க சொன்னால் எழுந்திருக்க வேண்டும். அதிகாலை 3 மணிக்கு என் வீட்டிற்கு வாருங்கள் என்று ஹீரோ உங்களை அழைத்தால் நீங்கள் அங்கு செல்ல வேண்டும். அப்படி நடந்து கொண்டால் தொடர்ந்து படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்படும். இல்லாவிட்டால் அந்த படத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். நடிப்பில் என்னால் முடிந்ததை செய்தேன். நல்ல கதாபாத்திரங்களைத் தேட முயற்சித்தேன். அனைவரும் செய்வது போல் நானும் சில தவறுகளை செய்தேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: