லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதி ஜம்னாமரத்தூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(35), கட்டிட தொழிலாளி. இவர் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலுக்கு உதவி செய்வதாக தகவல் கிடைத்திருப்பதாக ஜம்னாமரத்தூர் தனிப்பிரிவு ஏட்டு விஜய்(37) மிரட்டியுள்ளார். அதற்கு கோவிந்தராஜ், செம்மர கடத்தல் கும்பலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்டிட மேஸ்திரி வேலை செய்துதான் பிழைத்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஆனாலும் விஜய், தனிப்பிரிவில் பணிபுரிவதால் தான் கொடுக்கும் தகவலின்பேரில், உன் மீது வழக்கு போடுவார்கள் என சொல்லி ரூ. 15 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்நிலையில் தனிப்பிரிவு ஏட்டு விஜய், ஜம்னாமரத்தூரில் இருந்து திருவண்ணாமலை அடுத்த வானாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சில நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். பணி மாறுதலில் வந்த பிறகும், கோவிந்தராஜியிடம் பணத்துடன் வானாபுரத்துக்கு வருமாறு தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் கோவிந்தராஜ் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி நேற்று மாலை வானாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற கோவிந்தராஜ், அங்கிருந்த ஏட்டு விஜயிடம் ரூ. 15 ஆயிரத்தை  கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார்  விஜய்யை கையும் களவுமாக பிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: