காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை; காரில் கடத்திய கும்பல் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் அமீர் (19). இவரது தங்கையும், தர்மபுரி பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவரும், பாலக்கோடு அரசு கலை கல்லூரியில் படித்து வருகின்றனர். மாதேசுடன் பழகி வந்ததால், அமீர் தங்கையை கண்டித்துள்ளார். ஆனால், மாதேசுடன் பழகுவதை அவர் தவிர்க்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அமீர், மாதேஷை கொலை செய்ய திட்டமிட்டு, தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து சொகுசு காரிலும், டூவீலரிலும் நேற்று முன்தினம் மாலை, அரசு கல்லூரிக்கு சென்று வெளியே காத்திருந்தனர்.

கல்லூரி முடித்து வெளியே வந்த மாதேஷை, நால்வரும் சேர்ந்து காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த மாணவர்கள் ஓடி வருவதற்குள் கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது. ஆனால் டூவீலரில் தப்பிய இருவரை சுற்றி வளைத்து பிடித்த மாணவர்கள், பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், இருவரிடமும் விசாரித்ததில், மாதேஷை கடத்தி சென்று கொலை செய்ய திட்டமிட்டதை தெரிவித்தனர்.

இதனால், உஷாரான போலீசார், சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சூளகிரி போலீசார் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, அவ்வழியாக வந்த சொகுசு காரை மடக்கி காரில் வந்தவர்களை பிடித்து மாதேஷை மீட்டு பாலக்கோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அமீர் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 4 பேரையும் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தங்கையின் காதலனை, அவரது அண்ணன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு, காரில் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: