வாலிபர் அடித்துக் கொலை; மனைவி, க.காதலனுக்கு ஆயுள் தண்டனை

கரூர்: கரூர் அருகே கள்ளக்காதலனை ஏவி கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த திருக்கோரணத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(26). இவரது மனைவி காயத்ரி தேவி(25). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டம் மண்மங்கலம் கிழக்கூரை பகுதியை சேர்ந்த உறவினரான கமலக்கண்ணன்(25) என்பவருடன், காயத்ரி தேவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காயத்ரிதேவியின் தூண்டுதலின்பேரில், மணிகண்டனை, கமலக்கண்ணன், டாஸ்மாக் கடைக்கு அழைத்துச் சென்று மது வாங்கிக் கொடுத்து, தனது நண்பரான ரூபன்குமாருடன் சேர்ந்து, அடித்து கொலை செய்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, காயத்ரிதேவி, கமலக்கண்ணன், ரூபன்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று தீர்ப்பளித்தார். இதில், காயத்ரிதேவி, கமலக்கண்ணன் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். போதிய சாட்சியம் இல்லாததால் ரூபன்குமாரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.

Related Stories: