திருவள்ளூர், கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டு போட்டி!

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் முரளி, பாலசுப்பிரமணி, அப்துல் பாரி, லட்சுமி நாராயணன், ஹார்னீஷா ஆலம் பிரியதர்ஷினி, சையத் முகமது ஷா முன்னிலை வகித்தனர்.

போட்டியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர். துறை சார்ந்த போட்டிகளான அணி வகுப்பு பயிற்சி, ஏணி பயிற்சி, கயிறு ஏறுதல், நீர்விடு குழாய் போட்டி, தந்திர கதம்ப முறை பயிற்சி, நீச்சல் போட்டிகளும் உடல் திறனை வலுப்படுத்தும் விதமான போட்டிகளான தடகளம் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டெறிதல், தடை தாண்டுதல், கூடைப்பந்து, கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மண்டல விளையாட்டு போட்டிகளை தீயணைப்புத் துறையின் வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் துவக்கி வைத்தார். திருவள்ளூர் ஆயுதப்படை டிஎஸ்பி பாஸ்கரன், மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலர் அருணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: