போட்டோவுக்கு வித, விதமாக போஸ் கொடுத்து திருவிக. நகர் போலீஸ் ஸ்டேஷனில்; ரவுசு காட்டிய போதை இளைஞர்கள்

பெரம்பூர்: திருவிக.நகர் காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போதை இளைஞர்கள், போலீசார் படம் பிடித்தபோது விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தினர். இது போலீசாருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. சென்னை திருவிக. நகர் ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் வினோத் (40). இவர் சென்ட்ரிங் தொழிலாளி. நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு அங்குள்ள அம்ரிஷ் திருமண மண்டபம் முன் அமர்ந்து நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு அறிமுகமான 4 பேர் குடிபோதையில் வந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென  வினோத்திடம் வாக்குவாதம் செய்ததுடன் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். ஒருவர் தான்வைத்திருந்த கத்தியை எடுத்து வினோத்தின் கன்னம், இடது கால் மற்றும் வலது முட்டி ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு பெரியார் நகர்  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மேற்கண்ட 4 பேரும் பேப்பர் மில்ஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர்.  இதுபற்றி அறிந்ததும் திருவிக.நகர் போலீசார் சென்று அவர்கள் 4 பேரையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த காமேஷ் (42), திருவிக நகர் பகுதியை சேர்ந்த சேதுராமன் (48), செம்பியம் பகுதியைச் சேர்ந்த கலாநிதி (45), திருவிக நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (34) என்று தெரியவந்தது.

போதையில் இருந்த இவர்கள் போலீசார் விசாரித்தபோது ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் போட்டோ எடுக்கும் போது ‘’இந்த மாடல் போட்டோ ஓகேவா’’ என்று கேட்டதுடன் விதவிதமாக நின்று போலீசாருக்கு போஸ் கொடுத்ததாக தெரிகிறது. அளவுக்கு அதிகமாக போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நடந்துகொண்டதால் அவர்களை உடனடியாக போலீசார் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories: