மாமல்லபுரம், கல்பாக்கத்தில் உயர் ரக பைக் திருடிய 3 பேர் கைது

மாமல்லபுரம்: மாமல்லபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட மாமல்லபுரம், திருவிடந்தை, நெம்மேலி உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடுகளின் முன்பு நின்றிருக்கும் உயர் ரக பைக்குகள் அடிக்கடி திருடுபோயின. இதேபோல் கல்பாக்கம் பகுதிகளிலும் பைக் திருட்டுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து பைக் திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், மாமல்லபுரம் இசிஆர் சாலையில் நேற்று மாலை இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், எஸ்ஐ விஜயகுமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 பேரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த செல்வம் (எ) கரி செல்வம் (23), வியாசர்பாடி மெகபூப்கான் (48), கோவளம் அசாருதீன் (22) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் மாமல்லபுரத்தில் உயர் ரக 4 பைக், கல்பாக்கத்தில் 5 பைக் என மொத்தம் 9 பைக்குகள் திருடியுள்ளனர்.

பின்னர் அவற்றை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்து, அப்பணத்தில் உல்லாசமாக இருந்து வந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: