நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி; இலங்கையில் இருந்து அவசரமாக வெளியேறும் இளைஞர்கள்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உணவு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் விலையேற்றமும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளது. இலங்கையில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே செல்வதால் வாழ்க்கையை நடத்த முடியாத சூழலில் மக்கள் உள்ளனர். இதனால் இலங்கை தமிழர்கள் அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்துக்கு அகதிகளாக வருகிறார்கள். இந்த நிலையில் சமீப காலமாக இலங்கையில் இருந்து இளைஞர்கள் அதிகளவில் வெறியேறி வருவதாக தெரிய வந்துள்ளது.

இலங்கையை விட்டு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்கள், இளம்பெண்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வேலைக்காக ஒரு சிலர் மட்டுமே வெளிநாடுகளுக்கு சென்று வந்த நிலையில் தற்போது தினமும் நூற்றுக்கணக்கானோர் வெளியேறுகிறார்கள். பரபரப்பாக இயங்கும் ஒரு இடமாக கட்டுநாயக்க விமான நிலையம் மாறியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாராளுன்றத்தில் தயாசிறி ஜெயசேகர பேசும்போது,’பொருளாதார ரீதியில் நாடு பலவீனமான நிலையை எட்டியுள்ளது.

ஜூன் மாத பணவீக்கம் மட்டும் 54 சதவீதமாக உள்ளது.  பண வீக்கத்தில் ஜிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை தற்போது 2-வது இடத்தில் உள்ளது. ஜனவரி மாதம் முதல் பணவீக்கம் மாதந்தோறும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தற்போது தனிநபர்கள் 20, 50 மற்றும் 100 ரூபாய் நாணயத்தாள்கள் மூலம் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. எதிர்காலத்தில் 5 ஆயிரம் ரூபாய் நோட்டு கூட மதிப்பு இல்லாமல் போகலாம். பண வீக்கம் 54 சதவீதமாக இருக்கும்போது வங்கி வட்டி விகிதம் 20 முதல் 54 சதவீதம் வரை இருக்கும்போது ஒரு நாடு எப்படி செயல்பட முடியும்’ என்றார்.

Related Stories: