கடைக்கு சென்றபோது கடத்திச்சென்று 11-ம் வகுப்பு மாணவியை திருமணம்; போக்சோவில் வாலிபருக்கு சிறை

பெரம்பூர்: கடைக்கு சென்றபோது 11ம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், செம்பியம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், ‘’நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனது 16 வயது மகள், பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 2ம்தேதி மாலை கடைக்குச் சென்று வருவதாக கூறி சென்ற மகள் பின்னர் வீடு திரும்பவில்லை.

எனவே, அவரை கண்டுபிடித்து தரவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், செம்பியம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்குபதிவு செய்து மாணவியை தேடிவந்தார். இந்தநிலையில், சென்னை மடுமாநகர் கபிலர் குறுக்கு தெருவை சேர்ந்த சஞ்சய்குமார் (19) என்பவர்தான் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சஞ்சய்குமாரை போலீசார் கைது செய்து அவரது பிடியில் இருந்து மாணவியை பத்திரமாக மீட்டனர். இதன்பிறகு இரண்டுபேரையும் காவல் நிலையம் அழைத்து  சென்று விசாரணை நடத்தியபோது ஒரு கோயிலில் வைத்து மாணவிக்கு தாலி கட்டி சஞ்சய்குமார் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு சஞ்சய் குமாரை கைது செய்தனர்.

Related Stories: