சென்னை: சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, T-4 மதுரவாயல் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (06.07.2022) வானகரம் சர்வீஸ் சாலையில் கண்காணித்த போது, அங்கு 2 நபர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.வசந்த், வ/22, த/பெ.விஜயகுமார், எண்.16, பாரதி தெரு, மாந்தோப்பு, திருவண்ணாமலை மாவட்டம் 2.நதிம், வ/22, த/பெ.காதர் பாஷா, புது தெரு, திருவண்ணாமலை மாவட்டம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.2 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி வசந்த் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதே போல, G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (06.07.2022) மூலிகை பூங்கா அருகே கண்காணித்து அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த குமார், வ/45, த/பெ.அண்ணாமலை, எண்.107, திடீர் நகர், பிரிக்ளின் ரோடு, புரசைவாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (06.07.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.