டெல்லியில் அரசு பள்ளி வகுப்பறையில் சிசிடிவி கேமரா; நிகழ்வுகளை பெற்றோர் நேரடியாக பார்க்கவும் ஏற்பாடு

புதுடெல்லி: டெல்லி பள்ளி வகுப்பறைக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு நிகழ்வுகளை பெற்றோர் நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என 2019ம் ஆண்டு அரசு அறிவித்தது. இந்த திட்டமானது கல்வித்துறையின் மூளையாக உள்ளது. இந்த திட்டத்திற்கான பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், டெல்லியில் புதிதாக பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும், வகுப்பறைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டம் உள்ளது. வகுப்பறையின் நேரடி காட்சிகளை பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் கணினி வழியாக பார்க்கும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த நடவடிக்கையின் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு, கற்பித்தல் முறை ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள முடியும். இதற்காக பெற்றோர்களுக்கு தனிப்பட்ட ஐடி மற்றும் அதற்கான கடவுச்சொல்லுடன் கூடிய உள்நுழைவு சான்று வழங்கப்படும். இதற்கான ஒப்புதல் பெற்றோரிடமிருந்து பெறப்படும். மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை பொதுப்பணித்துறைக்கு சமர்பிக்க வேண்டும். அதன்பின் தகவல்கள் மென்பொருளில் பதிவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: