காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.120.75 கோடியில் வெள்ள தடுப்பு பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.120.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.120 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில், தந்திக்கால் வாய்க்கால், போரூர் உபரிநீர் கால்வாய் மற்றும் வரதராஜபுரம், ராயப்பா நகரின் வெளிவட்ட சாலை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, நீர்வளத்துறை சந்தீப் சக்சேனா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கடந்த பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், வெள்ளப் பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், திட்டங்கள் தீட்டப்பட்டு வெள்ளத் தடுப்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் கொளுத்துவான்சேரி சாலையில் ரூ.16 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் தந்திக்கால்வாய்க்கால் முதல் போரூர் ஏரி உபரிநீர் கால்வாய் வரை புதிய மூடுதளத்துடன் கூடிய கால்வாய் அமைக்கும் பணியில், உள்வட்ட சாலையில் அமைந்துள்ள தந்திக்கால் வாய்க்காலில் நடந்து வரும் உபரிநீர் போக்கி மற்றும் கதவுகள் அமைக்கும் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த வெள்ளத் தடுப்புப் பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாயினை ரூ.34 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் மற்றும் ஒழுங்கியம் அமைக்கும் பணியில், உள்வட்ட சாலையில் அமைந்துள்ள போரூர் உபரிநீர் கால்வாயில் நடந்து வரும் அடித்தள கான்கிரீட் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தாம்பரம் பகுதிக்கு அருகில் அடையாறு ஆற்றுப் பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ள அபாயத்திலிருந்து தவிர்க்கும் பொருட்டு, ரூ.70 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் சோமங்கலம் கிளை ஆற்றிலிருந்து ஒரு புறவழி பெரு மூடு வடிகால்வாய் மற்றும் அடையாறு ஆற்றின் எல்.எஸ் 5970 மீட்டர் முதல் எல்.எஸ் 19150 மீட்டர் வரை வெள்ள நீர் கடத்தும் திறனை அதிகப்படுத்தும் பணியில், வரதராஜபுரம், ராயப்பா நகர், வெளிவட்ட சாலையில் நடந்து வரும் மூடுதள கால்வாய் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வெள்ளத்தடுப்பு பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: