சென்னை: சென்னையில் பொது இடங்களான ரயில்வே, மார்க்கெட், மால்களில் கூடும் பொதுமக்கள், மாஸ்க் அணியாவிட்டால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நோய் பரவல் சற்று ஓய்ந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக சென்னை பெருநகர் உட்பட தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நிலையான வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், திரவ சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.