சென்னை: பின் வாசல் வழியாக அரசு பணியில் நியமிக்கப்பட்டவர்களை எந்த சூழ்நிலையிலும் பணி வரன்முறைப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பகுதி நேர தொழில்கல்வி ஆசிரியர்களாக பணியாற்றும் தங்களுக்கு பணி நிரந்தரம் கோரி, பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் மூலமாக நியமிக்கப்பட்ட கோவிந்தராசு, திவ்யா உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘மனுதாரர்கள் தகுதியான கல்வித்துறை அதிகாரிகளால் நியமிக்கப்படாமல், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து நியமனங்களும் தேர்வு விதிகளை பின்பற்றியே நடத்தப்பட வேண்டும். பின் வாசல் வழியாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை எந்த சூழ்நிலையிலும் வரன்முறைப்படுத்தக் கூடாது. வந்த வாசல் வழியாகவே திருப்பி அனுப்ப வேண்டும் என்றார்.