சென்னை: ஒன்றை தலைமை விஷயத்தில், அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் உறுப்பினரும் ஜெ.ஜெ., கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
ஜூலை 11ம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையிலான பிரச்னை சாதி ரீதியிலான பிரச்னையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஜூன் 28ம் தேதி மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.