சென்னை: பொறியியல் படிப்பில் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகள் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதுவரை மாணவர்கள் ஆன்லைனில் படித்தும், தேர்வு எழுதியும் வந்தனர். இந்தநிலையில் மாணவர்கள் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில், வருகிற பருவத் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்தது. அப்போது தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பரவி வந்ததால் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 2021 நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கடந்த மார்ச் - ஏப்ரலில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 2 நாட்களுக்கு வெளியான நிலையில், 62 சதவீதம் பேர் தோல்வியடைந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.