சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் நடமாடுகின்றன.நேற்று மாலை சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் நோக்கி ஒரு காரில் 4க்கும் மேற்பட்ட பயணிகள் சாலையில் சென்று கொண்டிருந்தனர். தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக கார் சென்று கொண்டிருந்தபோது சாலையோர வனப்பகுதியில் ஒரு காட்டு யானை நிற்பதை கண்டனர். காரின் முன்புறம் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்த காட்டு யானை திடீரென ஆக்ரோஷத்துடன் வேகமாக சாலைக்கு ஓடி வந்தது.