கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது

குளச்சல்:  குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றம் இருந்து வருகிறது. ஜூலை 5 ம் தேதி (நேற்று) வரை தமிழக கடல் பகுதியில் 40 கி.மீ.முதல் 50 கி.மீ.வேகத்திலும், சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும் என இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று காலை கடியபட்டணத்தில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. கரையில் நிறுத்தியிருந்த சகாயகுமார் என்பரின் பைபர் வள்ளத்தை திடீரென எழுந்த அலை இழுத்து சென்றது. இதை பார்த்த சகாயகுமார் மற்றும் விஜயன், மைக்கேல் ஆகியோர் கடலில் குதித்து வள்ளத்தை மீட்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் வள்ளம் கடலில் மூழ்கியது.

அலையின் வேகம் காரணமாக மூன்று பேரும் கரை சேர முடியாமல் கடலில் தத்தளித்தனர். இவர்களை  மீனவர்கள் 2 வள்ளங்களில் சென்று மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.மீட்பு பணியில் ஈடுப்பட்ட ஒரு வள்ளம் முட்டம் துறைமுகத்தில் கரை சேர்ந்தது. ஒரு வள்ளம் அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதனால் மீண்டும் மீனவர்கள் கடலில்  தத்தளித்தனர். பின்னர் தத்தளித்த மீனவர்கள் கயிறு மூலம் இழுத்து கரை சேர்க்கப்பட்டனர். ஆனால் வள்ளம் அலையில் சிக்கி தூண்டில் வளைவு கல்லில் தூக்கி வீசப்பட்டது. இதில் இன்ஜின், வலைகள் கடலில் மூழ்கியதுடன் வள்ளம் பெரும் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து மீனவர்கள் சகாயகுமார், பெபின் ஆகியோர் குளச்சல் மரைன் போலீசில் புகார் அளித்தனர்.

காற்றில் பறந்த விளம்பர பலகை பஸ் கண்ணாடி உடைந்தது

கருங்கல்: கருங்கலில் இருந்து தொலையாவட்டம், விழுந்தயம்பலம் வழியாக மேல் மிடாலத்துக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் இந்த பஸ் பயணிகளுடன் கிள்ளியூர் பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது பயங்கர சூறை காற்று விசியது. இதில் பூட்டப்பட்டிருந்த ஒரு மீன், இறைச்சி கடையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை காற்றில் பறந்து வந்து பஸ்சின் முன் பகுதியில் மோதியது. டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினர். இதனால் போர்டு, கண்ணாடியில் மோதி கீழே விழுந்தது. இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி முழுமையாக உடைந்து சிதறியது. போர்டு மோதி ெவளியே விழுந்ததால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Related Stories: