2 நாள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை..வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை

மும்பை: மும்பையில் 2வது நாளாக பெய்து வரும் பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வுமையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் நேற்று காலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்தும் ஏற்பட்டிருக்கிறது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரின் பெரும்பாலான இடங்களில் ரயிகள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

முக்கிய சாலைகளில் இடுப்பளவு வெள்ளம் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதல் மும்பையில் பாந்ரா, தாதர், சயன், தஹிசர், கலாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மும்பையில் வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.      

Related Stories: