திருச்சி: திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 அடி உயரத்தில் 60 கிலோ எடையுடன் 7 செப்பு கோபுர கலசங்கள், 324 சிற்பங்களுடன் மிக பிரம்மாண்டமான ராஜகோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது. இன்று காலை 6.45 மணி முதல் 7.25 மணி வரை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, பல்வேறு நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர், 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரத்திற்கு ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.