மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்: பெற்றோர் வலியுறுத்தல்

திருவெற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16வது வார்டுக்கு உட்பட்ட சடையங்குப்பத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 108 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த ரமேஷ் என்பவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அதன் பின்னர் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.

இதனால், ஆசிரியர்களே பள்ளியை பராமரித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளதால், பள்ளிக்கு தேவையான கூடுதல் வசதிகள் மற்றும் மாணவ, மாணவியர் கல்வி மேம்பாடு தொடர்பாக எந்த ஒரு கோரிக்கையும் பள்ளி கல்வித்துறையிடம் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியரை உடனடியாக நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘‘இந்த பள்ளி சிறப்பாக செயல்படுவதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை இங்கு ஆர்வத்துடன் சேர்க்கின்றனர். ஆனால் இங்கு தலைமை ஆசிரியர் இல்லை. மேலும் வகுப்பறைகள் குறைவாக இருப்பதால் மாணவர்கள் இட நெருக்கடியில் தவிக்கின்றனர். தலைமையாசிரியரை நியமித்து, கூடுதலாக வகுப்பறையை கட்டினால் பல ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்,’’ என்றனர்.

பழுதடைந்த விஏஓ அலுவலகம்

இந்த பள்ளிக்கு எதிரில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு, இடிந்து விடும் நிலையில் உள்ளது. மேலும் பள்ளிக்கு மிக அருகாமலேயே இந்த கட்டிடம் இருப்பதால் மாணவர்கள் மற்றும் இந்த அலுவலகம் வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.  எனவே, இந்த சிதிலமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதிலமடைந்த சமையலறை

இந்த நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு தயாரிக்க சமையல் அறை இல்லாததால், பயன்படாத பழைய பள்ளி கட்டிடத்தில் சமைக்கின்றனர். இந்த கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், சமையலர் மற்றும் பள்ளி ஊழியர்கள், மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, இந்த சிதிலமடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு, புதிதாக சமையல் கூடம் கட்டித் தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: