கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர பேருந்துகளில் பாதுகாப்பு வழிமுறையை பின்பற்ற வேண்டும்: எம்டிசி மேலாண் இயக்குனருக்கு மாநகராட்சி ஆணையர் கடிதம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு 1000த்தை கடந்துள்ளது. இதை  கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பேருந்துகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் உரிமையாளர்களுக்கும், போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமண மண்டபங்கள் திரையரங்குகள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது இன்றியமையாதது ஆகிறது. எனவே திருமண மண்டபங்கள் திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுது கொரோனா தொற்று அதிக அளவு பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே திரையரங்கங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் அதன் நிர்வாகிகள் தங்கள் வளாகங்களுக்கு பொதுமக்கள் வரும்பொழுது கீழ்கண்ட பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் அதிக அளவில் உள்ள இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் இருப்பதையும், முகக்கவசம் அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட இடங்களில் அவ்வப்பொழுது கிருமி நாசினி கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.திருமண மண்டபங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.

வணிக நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் மீது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ‘‘கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பாதுகாப்பு வழிமுறைகளை குறிப்பாக முகக்கவசம் அணிவது இன்றியமையாதது ஆகிறது.

எனவே சென்னை பெருநகர போக்குவரத்து கழக ஊழியர்களை குறிப்பாக பேருந்துகளில் பணியில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரை கட்டாயம் முகக்கவசம் அணியவும்,  பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களும் முகக்கவசம் அணிவதை நடத்துனர் உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும். மேலும் பேருந்து பணிமனைகளில் பணியாளர்கள் முகக்கவசம் அணிவதையும் சமுக இடைவெளியை பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.

பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். செலுத்தாத நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். பணிமனையின் மேலாளர் சம்பந்தப்பட்ட மண்டல நல அலுவலரை அனுகினால் பணிமனையிலே தடுப்பூசி செலுத்த சிறப்பு  முகாம் ஏற்படுத்தப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: